திருநெல்வேலி: அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் தங்க வைக்கப்பட்டுள்ள வார்டு வரை சர்வ சாதாரணமாக தெரு நாய்கள் சுற்றி வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள் மற்றும் வெளி நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இங்கு 1000-க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளுடன் கூடிய அறைகள் உள்ளது. இந்த அறைகளில் நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் மருத்துவமனையில் நோயாளிகள் தங்க வைக்கப்படும் வார்டுகள் வரை தெருநாய்கள் சென்று வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நாய்கள் நோயாளிகளை கடித்தால் கூடுதல் சிரமத்திற்கு உள்ளாகும் சூழல் உருவாகும் என்ற அச்சம் நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் எழுந்துள்ளது. மாவட்டத்தின் தலைநகரத்தில் உள்ள தலைமை மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள அந்த அவல நிலை, மருத்துவமனைக்கு வரும் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.முன்னதாக, நெல்லை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தையை பார்ப்பதற்கு கூட லஞ்சம் கேட்பதாக தந்தை ஒருவர் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், தற்போது பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Comments