ஈரோடு: சாலையோரம் சென்ற யானையை அங்கு இருந்த தெரு நாய்கள் வம்புக்கு இழுத்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர் வனக் கோட்டத்தில் உள்ள கேர்மாளம் வனப்பகுதியில் யானைகள் அதிகளவில் உள்ளன. அடர்ந்த காட்டுப்பகுதியை வாழ்விடமாக கொண்ட யானைகள் அடிக்கடி சாலையை கடந்து செல்வது வழக்கம். அப்போது அவ்வழியாக செல்லும் வாகனங்களை கண்டால் யானைகள் பயமுறுத்தி அச்சுறுத்தும். இந்த நிலையில், கேர்மாளத்தில் இருந்த தெரு நாய்கள் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த காட்டு யானையை பார்த்து குரைத்து வம்புக்கு இழுத்தன. இதனால் ஆத்திரமடைந்த யானை தெரு நாய்களை துரத்த தொடங்கியது. அப்போது அந்த வழியாக வந்த காரையும் பார்த்து யானை பிளிறியபடி தாக்க வந்ததால் வாகன ஓட்டி காரை பின்னோக்கி இயக்கி அதனிடமிருந்து தப்பினார். மேலும், அங்கு இங்குமாக அலைந்த இந்த யானை, கேர்மாளம் செக் போஸ்ட் வரை சென்றது. அப்போது அங்கு பணியில் இருந்த வனத் துறையினர் யானையை காட்டுக்குள் விரட்டினர்.
Comments