அரியலூர்: பெட்ரோல் தீர்ந்து விடுமோ? என்ற அச்சத்தில் வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்க்கில் காத்திருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.இஸ்ரேல்- ஈரான் போரால் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால், பல பகுதிகளில் ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் வீட்டு உபயோக சிலிண்டர் விற்பனையிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இதே நிலை டீசல் மற்றும் பெட்ரோலுக்கு வந்து விடுமோ? என்ற கலக்கத்தில் வாகன ஓட்டிகள் இருந்து வருகின்றனர். இந்நிலையில் கும்பகோணம் உள்ளிட்ட சில நகரங்களில் பெட்ரோல், டீசல் இல்லாததால் பெட்ரோல் பங்க்குகள் மூடப்பட்டுள்ளதாக ஜெயங்கொண்டம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இச்செய்தி காட்டுத் தீயாக பரவியது.இதனால் அதிர்ச்சிடைந்த வாகன ஓட்டிகள் பெட்ரோல் தீர்ந்து விடுவதற்குள் வண்டிகளில் பெட்ரோலை நிரப்பி விட வேண்டும் என்ற எண்ணத்தில் ஏராளமான வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்க்குகளில் குவிந்தனர். ஒருவரை ஒருவர் முண்டி அடித்துக் கொண்டு பெட்ரோல் வாங்க முற்பட்டதால் அவ்வப்போது லேசான வாக்குவாதமும் ஏற்பட்டது. எனினும் அரியலூர் மாவட்டத்தில் வரும் 10 நாட்களுக்கு போதுமான அளவு பெட்ரோல் கையிருப்பு உள்ளதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Comments