ஈரோடு: ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கொங்கஹள்ளி கோயில் குண்டம் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து வேண்டுதலை நிறைவேற்றினர். ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே கொங்கஹள்ளி வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற மல்லிகார்ஜுன சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் காலம் காலமாக ஆண் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதற்கிடையே ஆண்டுதோறும் நடைபெறும் குண்டம் திருவிழா விமரிசையாக நடைபெற்றது.முன்னதாக கோயிலில் மல்லிகார்ஜுன சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. இத்திருவிழாவை கண்டுகளிக்க தாளவாடி சுற்றுவட்டார பகுதி மட்டுமின்றி கர்நாடக மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். கோயிலுக்கு வந்த அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. தமிழக கர்நாடகத்தின் எல்லையில் அமைந்துள்ள கோயிலில் பெண்கள் செல்ல அனுமதியில்லை. இங்குள்ள பெண்கள் சுமார் 10 கிமீ தூரத்துக்கு அப்பால் நின்று தரிசனம் செய்வார்கள்.பாரம்பரியமாக நடைபெறும் இக்கோயில் குண்டம் விழாவில் பெண்கள் கோயில் எல்லையில் கற்பூரம் ஏற்றி வழிபடுவார்கள். இக்கோயிலில் தமிழர்களை விட கர்நாடகத்தை சேர்ந்த பக்தர்கள் அதிக அளவில் கலந்து கொள்வார்கள். இதன்படி மைசூர், சாம்ராஜ்நகர், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பக்தர்கள் விரதம் இருந்து கலந்து கொண்டனர்.
Comments