தூத்துக்குடி: குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் தமிழக அரசு 5,000 ரூபாய் வரவு வைத்தது தொடர்பாக கோவில்பட்டி நகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழக சட்டப் பேரவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியும், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் நாள்தோறும் போஸ்டர் யுத்தம் நடத்தி வருகின்றன.அந்த வகையில், சமீபத்தில் 3 மாதங்களுக்கான மகளிர் உரிமைத் தொகை மற்றும் கோடை கால சிறப்பு நிதி என 5 ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை பெறும் பெண்களின் வங்கிக் கணக்கில் வர வைக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகர் முழுவதும், அது தொடர்பாக, தமிழக முதல்வர் பெயருடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. "நீங்கள் ஆயிரம் ரூபாயை தடுக்க முயற்சித்தால் நான் என் மக்களுக்கு ரூபாய் 5 ஆயிரம் தருவேன்" - முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற வாசகத்துடன் முதல்வர் ஸ்டாலினின் ஒற்றை கைவிரல் புகைப்படம் மற்றும் பெரியார், அண்ணா, கருணாநிதி, திமுக கொடி, உதயசூரியன் படங்களும் அதில் இடம் பெற்றுள்ளன.
Comments