உதகை: உதகையில் பெய்து வரும் பனிப்பொழிவை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர்.நீலகிரி மாவட்டம் உதகை குன்னூர் பகுதியில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் கடும் குளிர் காரணமாக, உறைபனியின் தாக்கம் உச்சத்தை எட்டியுள்ளது. அதிகாலை நேரங்களில் கொட்டும் உறைபனி காரணமாக புல்வெளி முழுவதும் வெள்ளை நிற உறைபனி போர்வையால் மூடப்பட்டு குட்டி காஷ்மீராக காட்சியளித்து வருகிறது.இதனால், உறைபனியின் அழகை நேரில் காணவும், அந்த குளிர் அனுபவத்தை ரசிக்கவும் பெருமளவில் சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தருகின்றனர்.குறிப்பாக அதிகாலை 5 மணி முதல் 8 மணி வரை, தலைகுந்தா, ஜிம்கானா, பந்துமை போன்ற பகுதிகளில் புல்வெளிகள், தேயிலைத் தோட்டங்கள், வேலிகள் உள்ளிட்ட அனைத்தும் பனியால் முழுமையாக மூடப்பட்டு வெண் போர்வை போர்த்தியது போல் காட்சி அளிப்பது சுற்றுலாப் பயணிகளை பரவசத்தில் ஆழ்த்துகிறது. பனியால் மின்னும் இயற்கைக் காட்சிகளை செல்போன், கேமராவில் பதிவு செய்ய சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இதனால், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் உதகைக்கு அதிக அளவில் வந்து கொண்டிருக்கின்றனர்.
Comments