வேலூர்: மைக்கா மறுசுழற்சி தொழிற்சாலையில் நிகழ்ந்த தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள பெரியபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் தேவகுமார் (50). இவர் தனது பெயரில் இன்ஜினியரிங் ஒர்க்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தில் வேஸ்டேஜ் மைக்கா பொருட்களை உருக்கி மறுசுழற்சி செய்து, அவற்றை பிவிசி பைப் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அனுப்பும் தொழில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், தொழிற்சாலையில் திடீரென புகைமூட்டம் எழுந்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து குறுகிய நேரத்தில் அங்கு இருந்த மூலப்பொருட்கள் மற்றும் தயாரிப்பு பொருட்கள் தீப்பிடித்து வேகமாக பரவி எரிந்தன.இதையடுத்து தேவகுமார் உடனடியாக காட்பாடி காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தார். தகவல் கிடைத்ததும் காட்பாடி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், தொழிற்சாலைக்கு அருகே உள்ள நிலத்தில் வாழை மர நார்களை எரித்து அழிக்கும் போது, அங்கிருந்து பறந்த தீப்பொறிகள் தொழிற்சாலைக்கு பரவி தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்றனர்.
Comments