கோவை: கோயம்புத்தூர் கீரணத்தம் ஐடி பார்க் உள்ள பகுதியில் 3 காட்டு யானைகள் சுற்றி வரும் நிலையில் வனத்துறையினர் யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பெரியநாயக்கன்பாளையம், தடாகம் பகுதயில் அதிகளவிலான காட்டு யானைகள் உள்ளன. இந்த யானைகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்பு மலையடிவார கிராமங்களில் புகுந்து வருகின்றன. மேலும் அவ்வாறு வரும் யானைகள் பயிர் சேதங்களை ஏற்படுத்துவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வந்தனர்.இந்த நிலையில் நேற்று இரவு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இருந்து இறங்கிய 3 காட்டு யானைகள் கௌசிகா நதி பள்ளம் வழியாக தண்ணீரைத் தேடி நீண்ட தூரம் வந்துள்ளன. வனத்தில் இருந்து 15 கி.மீ தூரம் நடந்து கோவை மாநகர் பகுதியை ஒட்டியுள்ள கீரணத்தம் ஐ.டி.பார்க் அருகே இருந்த குட்டையில் இறங்கின. இதனை பார்த்து அந்த பகுதி பொதுமக்கள் உடனடியாக பெரியநாயக்கன்பாளையம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் யானைகளை விரட்டிய நிலையில் குட்டையில் இருந்து வெளியேறிய யானைகள் அங்கிருந்த அடர் மரங்கள் இருக்கும் பகுதிக்குள் சென்று விட்டன. மேலும், இன்றிவு 3 யானைகளையும் வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் முடிவு செய்தனர்.
Be the first to comment