மதுரை: தமிழகத்தில் கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் வைகை அணை நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 69 அடியை 36-வது முறையாக நிரம்பி உள்ளது. அதனால், அணைக்கு வரும் தண்ணீர் உபரியாக ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது விநாடிக்கு 3,000 கன அடி தண்ணீர் வைகை அணையின் பிரதான ஏழு மதகுகள் வழியாக திறக்கப்பட்டுள்ளது. வைகை அணையில் நீர் திறக்கப்பட்டுள்ளதால் ஐந்து மாவட்டங்களில் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாயம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக மக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ, கால் நடைகளை குளிப்பாட்டவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மதுரை மாநகருக்குள் ஓடும் வைகை ஆறு ஏறக்குறைய இரண்டு கரைகளை தொட்டு தண்ணீர் நிரம்பி செல்கிறது. இந்நிலையில் ஆல்பர்ட் விக்டர் மேம்பாலத்தின் அருகில் அமைந்துள்ள கல்பாலம் முழுவதும் மூழ்கிய காரணத்தால் அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், மீனாட்சி அரசினர் மகளிர் கலைக்கல்லூரி அருகே உள்ள கல்பாலம் பகுதியில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஓடுவதில் தடை ஏற்பட்டது. அப்போது அங்கு பணியில் போக்குவரத்து காவலர்கள் அடைப்பை அகற்றி தண்ணீர் வெளியேற உதவினர்.
Be the first to comment