வேலூர்: தாய்லாந்தில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் தங்கம் வென்று திரும்பிய குடியாத்தத்தை சேர்ந்த அஜித் குமாருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. குடியாத்தம் பிச்சனூர் பகுதியை சேர்ந்தவர் அஜித் குமார் (27). இவர் தாய்லாந்து நாட்டில் கடந்த மே 30, 31, மற்றும் ஜூன் 1 ஆகிய மூன்று தேதிகளில் நடைபெற்ற சர்வதேச சிலம்பப் போட்டியில் தமிழ்நாட்டின் சார்பில் சென்று கலந்து கொண்டார். இந்த சர்வதேச அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் மொத்தம் 17 நாடுகள் கலந்து கொண்டன. இந்த சிலம்பம் போட்டியில் 27 வயதினருக்கான பிரிவில் கலந்து கொண்ட அஜித் குமார் தங்கப்பதக்கம் வென்றார். இவருக்கு சிலம்பம் போட்டியில் மாஸ்டர் என்ற பட்டம் வழங்கி உள்ளனர். இதனைத் தொடர்ந்து சர்வதேச அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் கலந்து கொண்டு வென்ற அஜித் குமார், சொந்த ஊருக்கு அரசு பேருந்தில் திரும்பினார்.அப்போது நண்பர்கள், உறவினர்கள், மற்றும் பொதுமக்கள் பட்டாசு வெடித்து, மாலை மற்றும் சால்வை அணிவித்து அஜித்குமாரை உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் அவர் பேசுகையில், ”இன்றைய இளைஞர்கள் சிலம்பம் போட்டியில் நன்றாக பயிற்சி பெற்று வருகின்றனர். தமிழ்நாடு அரசு சிலம்பம் போட்டிக்கு தனி சலுகைகள் வழங்க வேண்டும். மேலும் அவர்களுக்கு அரசு பணி வழங்க வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளார்.
Comments