தஞ்சாவூர்: கும்பகோணம் அருள்மிகு நாகேஸ்வரசுவாமி திருக்கோயிலில் பங்குனி உற்சவப்பெருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பிரகன்நாயகி சமேத நாகேஸ்வரசுவாமி திருக்கோயில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானது. இந்த கோயிலில் தற்போது பங்குனி உத்திர பிரமோற்சவம் பத்து நாள்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.அதை போல் இந்த ஆண்டும் இன்று காலை பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரத்திற்குப் பல்வேறு வாசனைத் திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, நந்தியம்பெருமான் பொறிக்கப்பட்ட திருக்கோடி மங்கள வாத்தியங்கள் இசைக்க, வேத மந்திரங்கள் முழங்க, ஏற்றப்பட்டு, மகா தீபாராதனை செய்யப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர். இதனைத் தொடர்ந்து தினமும் காலை, மாலையில் சூரியபிரபை, சந்திர பிரபை, பூத வாகனம், ஷேக வாகனம், உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதியுலா நடைபெறுகிறது.விழாவை ஒட்டி முக்கிய நிகழ்ச்சியான வருகிற 5 ஆம் திருநாளான 27ம் தேதி வெள்ளிக்கிழமை தன்னை தானே பூஜித்தலுடன் பஞ்சமூர்த்திகள், ரிஷப வாகன ஓலைச்சப்பரமும், 7ஆம் திருநாளாக 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு திருக்கல்யாண உற்சவமும், பிறகு 9ம் நாளான 31ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்கு திருத்தேரோட்டமும், 10ம் நாளான ஏப்ரல் 1ம் தேதி புதன்கிழமை பஞ்சமூர்த்திகள் முற்பகல் 11 மணி அளவில், மகாமக குளக்கரைக்கு எழுந்தருள அங்கு பங்குனி உத்திர தீர்த்தவாரியும் நடைபெறுகிறது என்பது குறிப்பிடதக்கது.