Skip to playerSkip to main content
  • 8 minutes ago
மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனத்தின் பட்டணப்பிரவேச விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மயிலாடுதுறையில் உள்ள தருமபுர ஆதீன திருமடத்தில் உள்ள ஶ்ரீ ஞானபுரீஸ்வரர் கோயிலில், குரு முதல்வரின் குருபூஜை விழா மற்றும் தருமபுரம் ஆதீன மடாதிபதியின் பட்டிணப்பிரவேச விழா கடந்த மே 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் நடைபெற்றது. 11 ஆம் நாள் திருவிழாவாக குருமுதல்வர் குருபூஜை விழாவும், முக்கிய நிகழ்ச்சியான தருமபுர ஆதீன மடாதிபதி சிவிகை பல்லக்கில் அமர்ந்து பக்தர்கள் சுமந்து செல்லும் பட்டணப்பிரவேச விழாவும் நேற்று இரவு கோலாகலமாக நடைபெற்றது. தருமபுர ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருஆபரணங்கள் பூண்டு தங்க கொரடு பாதரட்சை, கமலம் அணிந்து திருக்கூட்ட அடியவர்கள் புடைசுழ சிவகைலாய வாத்தியங்கள், மேலதாள வாத்தியங்கள் முழங்க சிவிகை பல்லக்கில் அமர்ந்தார். தொடர்ந்து, சிவிகை பல்லக்கினை கோடி நாட்டாமைகள் நான்கு பேர் தலைமையில் 70 பேர் தோளில் சுமந்து தூக்கி சென்றனர். அப்போது ஆதீனமடத்தை சுற்றியுள்ள நான்கு வீதிகளில் பூரணகும்ப மரியாதையுடன் ஆதீன மடாதிபதிக்கு பொதுமக்கள் வரவேற்பு அளித்து, தீபாராதனை செய்து வழிபாடு நடத்தினர். இந்த விழாவில் ஆதீனங்களின் ஆதீனகர்த்தர்கள், தருமையாதீனப் பாடகர் வேல்முருகன், உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார், மத்திய அரசு வழக்குரைஞர் கே.ராஜேந்திரன், சீர்காழி தமிழ் சங்க நிறுவனர் மார்கோனி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Category

🗞
News
Transcript
00:00I
Comments

Recommended