வேலூர்: நெல்லூர்பேட்டையில் உள்ள பழமை வாய்ந்த கருப்புலீஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. சுட்டெரிக்கும் வெயிலிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, தேரை வடம்பிடித்து இழுத்தனர்.வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர்பேட்டை பகுதியில் அமைந்துள்ளது ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஸ்ரீ கருப்புலீஸ்வரர் கோயில். இந்த கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில், சித்திரை தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இன்று (ஏப். 27) சித்திரை தேர்த் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.முன்னதாக, அலங்கரிக்கப்பட்ட உற்சவர்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட தேரில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அதையடுத்து, நெல்லூர்பேட்டை மாட வீதிகள் வழியாக திருத்தேர் வீதி உலா நடைபெற்றது. அப்போது, சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கலந்து கொண்ட பக்தர்கள், தேரை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, பல்வேறு ஆன்மீக கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.இதில், குடியாத்தம் மட்டுமின்றி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.
Comments