ராமநாதபுரம்: இலங்கை புத்தளம் கடற்கரை பகுதியில் கரைவலை மீன்பிடிப்பில் டன்கணக்கில் கிடைத்த பாறை மீன்கள் பல லட்சத்திற்கு விற்பனையானதால் அப்பகுதி மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இலங்கையின் புத்தளம் மாவட்டம் கற்பிட்டி கடற்கரை பகுதியில் பாரம்பரிய கரைவலை மீனவர்கள், மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், இன்று (ஏப்ரல் 29) காலை வழக்கம்போல் கரைவலை மீன்பிடிப்புக்கு மீனவர்கள் சென்றனர். இந்நிலையில், அவர்களின் வலையில் டன் கணக்கில் பாறை மீன்கள் மற்றும் குமுளா மீன்கள் சிக்கின. அதனைக் கண்டு மகிழ்ச்சியடைந்த 20-க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஒன்றாக சேர்ந்து வலையை இழுத்து மீன்களை கரைக்குக் கொண்டு வந்தனர். ஒரே நேரத்தில் அவ்வளவு மீன்கள் சிக்கியதை அப்பகுதியில் இருப்பவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். இதனையடுத்து, விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த மீன்களை, வியாபாரிகள் கிலோ கணக்கில் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். இன்று ஒரே நாளில் மட்டும் பல லட்சம் ரூபாய்க்கு மீன்கள் விற்பனை செய்யப்பட்டதால், அப்பகுதி மீனவர்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Comments