திண்டுக்கல்: நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோயில் தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாகும். இதன் முக்கிய திருவிழாவான மாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து இன்று அதிகாலை பக்தர்கள் உலுப்பகுடி அருகிலுள்ள கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தில் புனித நீராடி மஞ்சள் ஆடைகள் அணிந்து அங்கிருந்து புனித தீர்த்தக்குடங்கள் எடுத்து சந்தன கருப்பு கோயிலில் வந்து சேர்ந்தனர்.பின்னர் அங்கிருந்து மேளதாளம் முழங்க வர்ணக் குடைகள், தீவட்டி பரிவாரங்களுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்த குடங்களை தலையில் சுமந்தபடி மஞ்சள் ஆடைகள் அணிந்த நிலையில் மாரியம்மன் கோயிலை சென்றடைந்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடந்தன.இதில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி 15 நாள் விரதம் தொடங்கினர். தொடர்ந்து இன்று இரவு சுமார் 9 மணிக்கு அம்மன் குளத்திலிருந்து கம்பம் நகர்வலமாக கொண்டு வரப்பட்டு கோயிலில் நிறுத்தப்படவுள்ளது.
Comments