திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது.பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தியளிக்கும் திருத்தலமாகவும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் திகழ்கிறது. அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில், திருக்கார்த்திகை தீப திருவிழா மிக முக்கியமானதாகும். 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில், தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் 30 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.அந்த வகையில், இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று (நவ.24) காலை கோலாகலமாக தொடங்கியது. முன்னதாக, இன்று அதிகாலை அண்ணாமலையார் கோயில் நடை திறக்கப்பட்டு, அண்ணாமலையார் மற்றும் பராசக்தியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து, விநாயகர், முருகர், அண்ணாமலையார் உடனுறை உண்ணாமுலையம்மன், பராசக்தியம்மன் மற்றும் சண்டிகேஷ்வரர் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் கொடிமரம் அருகே எழுந்தருளினர்.இதன் பின்னர், காலை 6.30 மணியளவில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, கோயிலின் முன்புள்ள 63 அடி உயரம் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Be the first to comment