தஞ்சாவூர்: வேலூரைத் தொடர்ந்து தஞ்சாவூரில் நடைபெறவுள்ள தவெக நிர்வாகிகள் சந்திப்பு பணிகளை பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் பார்வையிட்டு ஆலோசனை நடத்தினர்.தஞ்சை மாவட்டத்திற்குட்பட்ட 8 சட்டசபை தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகளை தமிழக வெற்றி கழகத் தலைவரும் நடிகருமான விஜய் சந்தித்து பேச இருக்கிறார். இந்த கூட்டம் நாளை (மார்ச் 4) காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே அய்யாசாமி பட்டி பிரிவு சாலை பகுதியில் 10 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் நடத்துவதற்கு தவெக நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்.இந்த கூட்டத்திற்கு அனுமதி கோரி கடந்த 28ஆம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராமிடம் தவெக நிர்வாகிகள் மனு அளித்தனர். இதைத் தொடர்ந்து தவெக நிர்வாகிகளிடம் போலீசார் அடிப்படை வசதி விவரங்கள் உட்பட 32 கேள்விகளை கேட்டு ஆலோசனை நடத்தினர். ஆனால் தவெக நிர்வாகிகளிடம் இருந்து நேற்று மாலை வரை பதில் வரவில்லை என காவல் அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த நிலையில் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ள இடத்தில் பூமி பூஜையை நேற்று (மார்ச் 2) தவெக நிர்வாகிகள் நடத்தினர். அதைத் தொடர்ந்து இரவு அந்த இடத்தை தவெக பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் நேரில் பார்வையிட்டார். அப்போது அவரிடம் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்கு போலீசார் அனுமதி அளித்து இருக்கிறார்களா? என்று கேட்டபோது அவர் பதிலளிக்காமல் சென்று விட்டார்.
Comments