திருநெல்வேலி: சாலையில் வந்த பாம்பை முதியவர் ஒருவர் கையில் பிடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை அடுத்த கோட்டாரங்குளம் விளக்கு பகுதியில் சுமார் 7 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று சுற்றி திரிந்தது. இதனை அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். போக்குவரத்து சாலை ஓரம் மக்களின் கூட்டத்தை பார்த்து மிரண்ட அந்த பாம்பு அங்கும் இங்குமாக ஓடியது. இந்த நிலையில் கூட்டத்தில் இருந்த முதியவர் ஒருவர் திடீரென அந்த நல்ல பாம்புவின் வால் பகுதியை லாவகமாக பிடித்து அலேக்காக தூக்கினார். அப்போது பாம்பு ஆக்ரோஷமாக முதியவரை பார்த்து கடிக்க சென்றது. ஆனால் பாம்பு கடியில் இருந்து முதியவர் தப்பினார். பின்னர் பாம்பை கீழே விட்ட நிலையில் அது அருகில் உள்ள சாலை மீது ஏறியது. பின்னர், அதனை அடிக்காமல் அருகில் உள்ள புதர் பகுதிக்கு மக்கள் விரட்டி விட்டனர். அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகளும் பாம்பை வேடிக்கை பார்த்தனர். இதை அங்கு இருப்பவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு தற்போது வைரலாகி வருகிறது.
Comments