தூத்துக்குடி: திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தில் விலை குறைந்து காணப்பட்டதால் பொதுமக்கள் ஆர்வமுடன் மீன்களை வாங்கிச் சென்றனர்.தூத்துக்குடி, திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஏராளமான மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க செல்வது வழக்கம். அதே போல், இவர்கள் வாரந்தோறும் சனிக்கிழமை கரை திரும்புவதும் வழக்கம். அதன்படி, இன்று சனிக்கிழமை என்பதால் ஏராளமான நாட்டுப்படகு மீனவர்கள் கரை திரும்பினர். இதனால் மீன்களின் வரத்து அதிகமாகவே காணப்பட்டது.ஆனால், கிறிஸ்தவர்களின் தவக்காலம் துவங்கி உள்ளதால் ஏராளமானோர் அசைவ உணவுகளைத் தவிர்ப்பர். மேலும் இஸ்லாமியர்களின் ரம்ஜான் நோன்பு துவங்கியதால் மீன்களை வாங்க பொதுமக்களின் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. இதன் காரணமாக வழக்கத்தை விட மீன்களின் விலை குறைந்து காணப்பட்டது. வழக்கமாக ஆயிரம் ரூபாய் வரை செல்லக் கூடிய வஞ்சிரம், சீலா மீன்கள் கிலோ 650 ரூபாய் வரையும், விளமீன், ஊழி, பாறை ஆகிய ரக மீன்கள் கிலோ 300 ரூபாய் வரையும், வங்கனை ஒரு கூடை 1800 ரூபாய் வரையும், சால மீன் ஒரு கூடை 800 ரூபாய் வரையும், நண்டு ஒரு கிலோ 600 ரூபாய் வரை விற்பனையானது. விலை குறைந்து காணப்பட்டதால் பொதுமக்கள் ஆர்வமுடன் மீன்களை வாங்கிச் சென்றனர்.
Comments