வேலூர்: குடியாத்தம் அருகே உள்ள ஒரு ஏரியில் கிடந்த ஐந்து தலை நாகத்துடன் கூடிய அம்மன் கல் சிலையை பொதுமக்கள் கண்டெடுத்தனர்.வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை அடுத்து நெல்லூர் பேட்டை ஏரி அமைந்திருக்கிறது. சுமார் 450 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி தான் வேலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியாகும். இன்று காலை இந்த ஏரிக்கரையின் ஓரத்தில் ஐந்து தலை நாகத்துடன் கூடிய இரண்டு அடி அம்மன் கல் சிலை ஒன்று இருப்பதை அப்பகுதி மக்கள் கண்டனர்.உடனடியாக இதுகுறித்து காவல்துறைக்கும் வருவாய்த்துறைக்கும் தகவல் தெரிவித்த நிலையில் அவர்கள் வந்து கல் சிலையை மீட்டனர். அதற்குள் அங்கு குவிந்த அப்பகுதி பெண்கள் அம்மன் சிலைக்கு மஞ்சள் நீரால் அபிஷேகம் செய்து, மஞ்சள் குங்குமம் பூசி, மாலை அணிவித்து, கற்பூரம் ஏற்றி நெகிழ்ச்சியுடன் வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து, அந்த சிலையை கொண்டுவந்து ஏரியில் வைத்தது யார்? ஏரிக்கரையில் அம்மன் சிலை எப்படி வந்தது? என்பது குறித்து வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments