ராணிப்பேட்டை: கோயில் வளாகத்தில் இருந்த மீன் தொட்டியில் தவறி விழுந்து 3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஆற்காடு அடுத்த இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் பாபு (36). இவரது மனைவி மேகலா (32). இவர் ஆற்காடு–செய்யாறு சாலையில் அமைந்துள்ள தோப்பு கருப்புசாமி கோயிலில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வருகிறார். தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். இந்நிலையில், இன்று காலை சுமார் 10 மணியளவில் தனது இரண்டாவது மகனான லட்சண் (3) என்பவரை உடன் அழைத்துக் கொண்டு மேகலா பணிக்கு சென்றுள்ளார்.கோயில் வளாகத்தில் பணியில் ஈடுபட்டிருந்த போது, கோயில் உட்புறத்தில் சிமெண்டால் செய்யப்பட்டிருந்த சிறிய மீன் தொட்டியில் சிறுவன் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதைக் கவனித்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக சிறுவனை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.இதையடுத்து சிறுவனின் உடல் உடற்கூறு ஆய்விற்காக ஆற்காடு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஆற்காடு நகர் போலீசார், சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த துயரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Comments