கடலூர்: பாமக நிர்வாகியின் வீட்டில் குழந்தைக்கு, அக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தாலாட்டு பாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கடலூர் பாரதி சாலையில் நடைபெற்ற ஐபிஎஸ் அதிகாரிகள் திருமண நிகழ்வில், பாமக நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், அன்புமணி மீதான ஒழுங்கு நடவடிக்கை குழு குறித்த கேள்விக்கு, "போகப் போக தெரியும்" என பாடல் பாடி பதிலளித்தார்.இதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்ட செயலாளர் கோபிநாத் வீட்டிற்கு சென்ற ராமதாஸ், அவர்கள் வீட்டில் இருந்த குழந்தையை வாங்கி, மடியில் வைத்து கொண்டு தாலாட்டு பாடினார். மேலும் அவர் பாடிய ”ஆராரோ, ஆரிரரோ” பாடலை பாமகவினர் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.அதில், ”காலை இளம் சூரியனே… ஆராரோ, ஆரிராரோ… ஆரிராரோ, ஆராரோ…” என்று பாடினார். சிறிது நேரத்தில் ராமதாஸ், ”பையன் தூங்கிட்டான் பா” என்று கூற அனைவரும் சிரித்தனர். அந்த குழந்தைக்கு பெற்றோர்கள், விகாஷினி என்று பெயர் வைத்திருந்தனர். இதனைக் கேட்ட ராமதாஸ், ”வடமொழி பெயராக இருக்கிறதே? அழகிய தமிழில் பெயர் வைத்தால் நன்றாக இருக்கும். ”வெண்பா” என்று பெயர் வைக்கவும். இல்லையெனில் ”செம்மலர்” எனப் பெயர் வைக்கலாம்” என்று அறிவுறுத்தினார்.
Comments