திருவண்ணாமலை: அய்யம்பாளையத்தில் சாலை சேதமடைந்து சேறும், சகதியுமாக இருப்பதால், சீரமைத்து தரக்கோரி அப்பகுதி மக்கள் சாலையில் நாற்று நட்டு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே உள்ள அய்யம்பாளையம் கிராம மக்கள் கடந்த சில ஆண்டுகளாக உரிய சாலை வசதிகளின்றி கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, அய்யம்பாளையத்திலிருந்து கிடாம்பாளையம் செல்லும் சாலை முறையான பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால், மழைக்காலத்தில் அங்கு போக்குவரத்து முடங்குவது வாடிக்கையாகி விட்டது.இந்த சாலையைதான் தினமும் விலாங்குளம், ஓமுடி, சாலமேடு, கட்டவரம், தெப்பனந்தல், கிடாம்பாளையம் உள்ளிட்ட 8கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் இந்த சாலை முழுவதும் சேறும், சகதியுமாக மாறி நடந்துகூட செல்லமுடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே சாலையை சீரமைத்து தரக்கோரி மக்கள் பல முறை மனுக்கள் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து சேறு நிறைந்த சாலையில் நாற்று நட்டு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், “சாலையை சரி செய்யாவிட்டால் இதை வயலாகவே மாற்றிவிடலாம்” எனவும் தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சாலை பணிகள் விரைவில் தொடங்கப்படும் என உறுதியளித்துள்ளனர்.
Be the first to comment