தேனி: கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் சுருளி அருவி அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகவும், ஆன்மீக தலமாகவும் உள்ள இந்த அருவிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் வருகை தந்து அருவியில் குளித்து விட்டு அங்குள்ள சிவாலயங்களில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக தென்மேற்கு பருவமழை பெய்யாமல் இருந்ததால், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டு சுருளி அருவி தண்ணீர் இன்றி வெறும் பாறையாக காட்சியளித்து வந்தது. இந்நிலையில், நேற்று (ஜூலை 31) இரவு சுருளி அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அரிசி பாறை, ஈத்தக்காடு, தூவானம் அணை மற்றும் அதனை சுற்றியுள்ள ஆற்றுப் பகுதிகளில் அதிக அளவில் கனமழை பெய்து அருவிக்கு வரும் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இதனால் சுற்றுலாப் பயணிகள் நலன் கருதி அருவியில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும் நீர்வரத்து சீராகும் வரை சுருளி அருவிக்கு யாரும் வர வேண்டாம் என வனத்துறையினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
Comments