நீலகிரி: குன்னூர் கிராம பகுதியில் இரவு நேரத்தில் உலா வந்த சிறுத்தையால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.நீலகிரி மாவட்டம் அடர்ந்த வனங்கள் சூழ்ந்த பகுதியாகும். இந்த வனப் பகுதியில் கரடி, காட்டெருமை, சிறுத்தை, புலி, யானை உள்ளிட்ட அரிய வகை விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. தற்போது கோடை காலம் என்பதால் உணவு மற்றும் குடிநீருக்காக வனவிலங்குகள் வனத்தை விட்டு குடியிருப்புப் பகுதிக்குள் உலா வருகின்றன. இந்த நிலையில் குன்னூர் கேட்டில் பவுண்ட் அண்ணா நகர் பகுதியில், இரவு நேரத்தில் உணவு தேடி ஊருக்குள் சிறுத்தை வந்த காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவி, அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுத்தை, இரவு நேரத்தில் சர்வ சாதாரணமாக நடந்து செல்லும் காட்சி தெளிவாக பதிவாகியுள்ளது. மனிதர்கள் நடமாட்டம் குறைந்த நேரத்தை பயன்படுத்தி, சிறுத்தை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்ததாக வனத் துறையினர் கூறுகின்றனர். இதனால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென வனத் துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.
Comments