நீலகிரி: ஒற்றை காட்டு யானை வீட்டின் கேட்டை அசால்டாக தகர்த்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறதுநீலகிரி மாவட்டம் கூடலூர், சேரன்கோடு கையூண்ணி பகுதியில் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் ஒற்றை காட்டு யானை உலா வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை, ஒரு வீட்டின் முன்புறம் உள்ள கேட்டினை உடைத்து விவசாய நிலங்களை சேதப்படுத்தியதாகவும், காட்டு யானையின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.மேலும் பெரும் அசம்பாவிதம் ஏதேனும் ஏற்படும் முன்பு வனத் துறையினர், விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து வனத் துறையினர், ஒற்றை யானையை நடமாட்டம் குறித்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும், விரைவில் அதனை அப்பகுதியில் இருந்து அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளனர். மேலும் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், ஒற்றை யானையை கண்டவுடன் உடனடியாக வனத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த பகுதியில் காட்டு யானை தடுப்பு வேலியை உடைப்பது போன்ற வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது