அரியலூர்: பசுபதீஸ்வரர் கோயிலில் லிங்கத்தின் மேல் சூரிய ஒளி படும் அபூர்வ நிகழ்வை பக்தர்கள் வழிபட்டனர்.அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே கொள்ளிடம் ஆறு பாயும் காவிரி கரை ஓரத்தில் அமைந்துள்ளது காரைக்குறிச்சி கிராமம். இந்த கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழர் காலத்தில் கட்டப்பட்ட பசுபதீஸ்வரர் ஆலயம் ஒன்று உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும், ஆகஸ்ட் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 19ஆம் தேதியில் இருந்து 25ஆம் தேதி வரை லிங்கத்தின் மேல் சூரிய ஒளி படும் அபூர்வ நிகழ்வு நடைபெறும். இதனால் சூரிய பகவான், சிவனை இந்த தலத்தில் வழிபட்டதாகவும் கூறப்படுகிறது. ஆகஸ்ட் மற்றும் ஏப்ரல் மாதத்தில் சூரிய பகவான் வலம் வந்து ஈசனை வழிபடுவதாக ஐதீகம்.அதன்படி, இன்று (ஏப்.19) காலை 6:10 மணியில் இருந்து 6:20 மணி வரைக்கும் சூரிய உதயமானது. அப்போது சூரியனில் இருந்து வெளிப்படும் ஒளிக்கதிரானது, நேரிடையாக லிங்கத்தின் மீது பட்டு பொன்னொளியில் ஜொலித்தது. இந்த நிகழ்வானது சுமார் 10 நிமிடம் வரை நீடித்தது. அதனால் ஏராளமான பக்தர்கள் இன்று காலை முதலே கோயிலுக்கு வருகை தந்து, சூரிய பகவான் சிவனை வழிபடுவதை கண்டுகளித்து, வழிபட்டனர். இந்த அரிய நிகழ்வானது ஓரிரு நாட்கள் மட்டுமே நிகழும் என பக்தர்கள் தெரிவித்தனர்.
Comments