மயிலாடுதுறை: அஇபுதமமுக பரப்புரையில் அக்கட்சியில் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா நேரம் கடந்து வந்ததால், வாக்கு கேட்டு பேச முடியாமல் கை அசைத்து சென்ற சம்பவம் நீண்ட நேரம் காத்திருந்த தொண்டர்களுக்கு ஏமாற்றம் அளித்தது.தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வரும் சூழலில், தேர்தல் விதிமுறைகளின்படி இரவு 10 மணி வரை மட்டுமே பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி (தனி) சட்டமன்றத் தொகுதியில் அஇபுதமமுக சார்பில் மாலதி 'தென்னந்தோப்பு' சின்னத்தில் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க அக்கட்சியின் பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா நேற்று சீர்காழி வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.இதையொட்டி, அங்கு பெருந்திரளான மக்கள் பழைய பேருந்து நிலையத்தில் மாலை முதலே குவியத் தொடங்கினர். இரவு 10 மணி வரை அவர் வராததால், நீண்ட நேரம் காத்திருந்த தொண்டர்களில் ஒரு பகுதியினர் சோர்வடைந்து கலைந்து சென்றனர். இறுதியில், இரவு 10:30 மணியளவிலேயே சசிகலா சீர்காழி பழைய பேருந்து நிலையப் பகுதிக்கு வந்து சேர்ந்தார். இரவு 10 மணிக்கு மேல் ஒலிப்பெருக்கி மூலம் பேசத் தடை இருந்ததால் அவரால் மேடையில் பேசவோ அல்லது வாக்கு சேகரிக்கவோ இயலவில்லை. இதனால், தனது வாகனத்தின் மேலிருந்தவாறே அங்கிருந்த தொண்டர்களைப் பார்த்து புன்னகையுடன் கையசைத்தபடி சென்றார். சசிகலாவின் பேச்சைக் கேட்கப் பல மணி நேரம் காத்திருந்த அவரது ஆதரவாளரக்ள், அவர் பேசாமலேயே சென்றதால் மிகுந்த ஏமாற்றத்துடன் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Comments