ஈரோடு: தாளவாடியில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இஸ்லாமியர் ஆதரவுடன் மசூதியின் வாசலில் தீக்குண்டம் இறங்கும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் கர்நாடக மாநில எல்லையில் அமைந்துள்ள தாளவாடி மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா கொண்டாடுவது வழக்கம். இக்கோயில் முன் குண்டம் இறங்கும் இடத்தில் வலது புறத்தில் இஸ்லாமியர் தொழுகை நடத்தும் பெரிய பள்ளி வாசல் அமைந்துள்ளது. மாரியம்மன் கோயிலையொட்டி பள்ளி வாசல் அமைந்துள்ளதால் இஸ்லாமியர் ஆதரவுடன் இந்த விழா நடைபெறும். மாரியம்மன் கோயிலும் இஸ்லாமிய பள்ளிவாசல் அருகே இருந்தபோதிலும் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விழா நடைபெற்றது.பெரும்பாலும் குண்டம் அதிகாலை நேரத்தில் நடைபெறும். ஆனால் பள்ளி வாசலில் அதிகாலை தொழுகை நடத்தப்படுவதால் முன்னோர்கள் காலை 9.30 மணிக்கு குண்டம் விழாவை நடத்தி வருகின்றனர். நடப்பாண்டுக்காக விழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி தாளவாடி மாரியம்மன் மற்றும் கும்டாபுரம் மாரியம்மன் உற்சவர் கோயிலுக்கு அழைத்து வரப்பட்டனர். குண்டத்தை சுற்றிலும் தீபாரதனை நடந்தபோது பக்தர்கள் கோஷம் எழுப்பினர்.
Comments