விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, தேர்தல் பிரச்சாரத்தின் போது கண்கலங்கியபடி உரையாற்றிய சம்பவம் அக்கட்சித் தொண்டர்களை அதிர்ச்சியடைய செய்தது.தமிழகத்தில் வருகின்ற 23ம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரச்சார மேடையில் அன்னியூர் சிவா பேசியபோது, "நான் மேடையிலேயே அழுகிறேன். ஏனெனில், ஒரு முதலமைச்சர் என்னைப் போன்ற சாதாரண வேட்பாளரை இங்கு நிறுத்தியிருக்கிறார்,'" என்று உணர்ச்சி வசப்பட்டு கூறினார். அப்போது தனது குடும்பப் பின்னணியை நினைவுகூர்ந்த அவர், “என் தாத்தா மேல்சட்டை கூட போடாதவர். நான் ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவன். ஆனால் இந்த தொகுதிக்காக 700 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் செய்திருக்கிறேன்,” எனக் கூறி கண்ணீர் விட்டார்.மேலும், "என் தலைவர் என்னைப் பாராட்டுவதைக் காட்டிலும், மக்களின் அன்பே எனக்கு பெரிய சந்தோஷம். கடந்த 18 மாதங்களாக உங்களுக்காக உழைத்திருக்கிறேன். நீங்கள் போட்ட ஓட்டுக்கு நான் நன்றியுடன் இருந்தேன். நான் செய்த பணிக்கு நீங்கள் நன்றி சொல்ல வேண்டுமென்றால், உதயசூரியன் சின்னத்தில் எனக்கு அதிக வாக்குகள் அளிக்க வேண்டும்,” என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.
Comments