நீலகிரி: படுகர் இன மக்கள் குலதெய்வமாக கொண்டாடும் ஹெத்தையம்மன் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஜெகதளா கிராமத்தை தலைமையிடமாக கொண்ட ஆரூர் கிராமங்களில் வசிக்கும் படுகர் இன மக்கள், ஹெத்தையம்மன் பண்டிகையை ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், இந்த ஆண்டு ஹெத்தையம்மன் திருவிழா கடந்த மாதம் கோலாகலமாக தொடங்கியது. இதனையடுத்து, 48 நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள் கோயிலில் இருந்து கொதுமுடி வரை நடந்து சென்று அருள்வாக்கு கூறினர்.திருவிழாவில் ஒரு பகுதியாக குண்டம் திருவிழா காரக்கொரை மடிமனையில் நடைபெற்றது. இதில், ஜெகதளா, காரக்கொரை, ஓதனட்டி, பேரட்டி, மல்லிகொரை, மஞ்சுதளா, சின்ன பிக்கட்டி, பெரிய பிக்கட்டி ஆகிய 8 கிராம மக்கள் பாரம்பரிய வெண்ணிற ஆடை அணிந்து கலந்து கொண்டனர். இதில், சிறப்பு பூஜை செய்யப்பட்டு கோயில் பூசாரி முதலில் குண்டம் இறங்கினார். பின்னர் கும்பம் எடுத்து வந்த பூசாரி உட்பட 11 பக்தர்கள் குண்டம் இறங்கினர்.தொடர்ந்து, சிறப்பு வழிபாடுகள் மற்றும் பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான படுகர் இன மக்கள் கலந்து கொண்டு நடனமாடினர். விழாவை முன்னிட்டு அனைவருக்கும் பாரம்பரிய உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது.
Comments