திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே காட்டு யானை ஒன்று விவசாய நிலத்தில் புகுந்து வேலிகளை உடைத்து, தென்னை, வாழை மரங்களை மிதித்தும், தின்றும் சேதப்படுத்தியது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அரங்கல்துருகம் ஊராட்சிக்குட்பட்ட சுட்டகுண்டா மலைக்கிராமத்தைச் சேர்ந்தவர் எத்துராஜ். இவருக்குச் சொந்தமான விளைநிலத்தில், இன்று அதிகாலை புகுந்த காட்டுயானை ஒன்று நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த வேலிகளை உடைத்து, தென்னை மற்றும் வாழை மரங்களை மிதித்தும், தின்றும் பெரும் சேதப்படுத்தியுள்ளது.பின்னர், நிலத்திற்கு சென்ற எத்துராஜ் வேலிகளை உடைத்து, பயிர்களைக் காட்டுயானை சேதப்படுத்தி இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இச்சம்பவம் குறித்து, ஆம்பூர் வனத் துறையினருக்குத் தகவல் அளித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத் துறையினர், காட்டுயானை நடமாட்டம் குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இப்பகுதியில் யானைகளால் விளைநிலங்கன் சேதப்படுத்தப்படுவது விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கோடை காலம் நெருங்கும் நிலையில், காட்டுயானைகள் உணவு தேடி நிலப்பகுதிக்கு வராத வண்ணம் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments