பொள்ளாச்சி: ஆழியார் அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு இரண்டாம் போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கபட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனைமலை அடுத்த ஆழியார் அணையின் மொத்த கொள்ளளவு 120 அடி. தற்போது 118.50 அடியாக எட்டியுள்ள நிலையில் இரண்டாம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.இதனை அடுத்து ஐந்து வாய்க்கால்கள் வழியாக ஆழியாறு பழைய ஆயக்கட்டில் உள்ள 6,400 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு இரண்டாம் போக பாசனத்திற்காக இன்று முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை ஆழியார் அணையில் இருந்து தொடர்ந்து 173 நாட்களுக்கு 1143 மில்லியன் கன அடி நீர் மிகாமல் தண்ணீர் திறந்து விட வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டது.இதனைத் தொடர்ந்து இன்று நீர்வளத்துறை, செயல் பொறியாளர் சிங்காரவேலு, உதவி பொறியாளர் கார்த்திக் கோகுல், அதிகாரிகள் பழைய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் முன்னிலையில் மலர் தூவி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், "ஆழியார் அணை பகுதியில் தொடர் மழை காரணமாக அணை நிரம்பி உள்ளது. தற்போது விவசாய பயன்பாட்டிற்கு தமிழக அரசு உத்தரவின் பேரில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் தற்போது திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் 6400 ஏக்கர் விவசாய நன்செய் நிலங்களுக்கு பயன்படுத்த உள்ளது என்பதும் இதனால் அதிக அளவில் விவசாயம் செய்யப்படும் எனவும் மகிழ்ச்சியாக உள்ளது" என தெரிவித்தனர்.
Be the first to comment