கன்னியாகுமரி: மலையாள மொழி பேசும் மக்களின் வசந்த விழாவாக ஓணம் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த ஓணம் பண்டிகைக்காக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாட்டின் மிகப்பெரிய தோவாளை மலர் சந்தையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும், பூக்கள் இறக்குமதி செய்யப்பட்டு கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டன. இந்நிலையில் இந்த ஆண்டு ஓணம் பண்டிகையை முன்னிட்டு சுமார் 1200 டன் பல்வேறு வகையான பூக்கள் தோவாளை மலர் சந்தையில் விற்பனை செய்யப்பட்டன. இதில் அதிகமான பூக்கள் கேரளா மற்றும் குமரி மாவட்ட வியாபாரிகள், பொதுமக்கள் வாங்கி சென்றனர். இந்நிலையில் தோவாளை மலர் சந்தையில் வியாபாரம் முடிந்து மீதம் சுமார் 500 கிலோ பூக்கள் இருந்தன. இந்த பூக்களை கொண்டு வியாபாரிகள், அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகையை கொண்டாடினர். இந்த பிரம்மாண்ட அத்தப்பூ கோலத்தில் கிரேந்தி , ரோஜா, செவ்வந்தி, சம்பங்கி மற்றும் பச்சை துளசி போன்றவற்றை வைத்து பிரமாண்டமான கோலமிட்டு, அதன் நடுவே கேரள மன்னர் மாவேலி சக்கரவர்த்தியின் உருவத்தை அமைத்திருந்தனர்.தொடர்ந்து 3-வது ஆண்டாக இது போன்று பிரமாண்டமான அத்தப்பூ கோலம் போட்டதால் இதனை காண்பதற்காக ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளும் தோவாளை மலர் சந்தைக்கு வருகை புரிந்தனர்.
Comments