ராணிப்பேட்டை: அரக்கோணம் அருகே உள்ள கைனூர் பகுதியில் போதையில் இருந்த இளைஞர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.ராணிப்பேட்டை மாவட்டம் கைனூர் அரசு தொடக்கப் பள்ளியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு, காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு நிறைவடைந்ததும், பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் விவி பேட் (VVPAT) இயந்திரங்கள் அனைத்தும் முறையாக சீல் வைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேன்களில் ஏற்றப்பட்டன.அந்த நேரத்தில், இரண்டு இளைஞர்கள் மது போதையில் இருசக்கர வாகனத்தில் அப்பகுதியில் சுற்றித் திரிந்தனர். அவர்கள் பைக்கை வேகமாக ஓட்டி, அதிக சத்தத்துடன் அங்கும் இங்குமாக சுற்றியதால் அங்கு பணியில் இருந்த போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரிக்க முயன்றனர். அப்போது, போதையில் இருந்த இளைஞர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நிலைமை தீவிரமடைந்ததால், போலீசார் இருவரையும் ஜீப்பில் ஏற்ற முயன்றனர்.அந்த நேரத்தில், ஒருவன் போலீசாரின் பிடியிலிருந்து தப்பித்து ஓடி விட்டார். மற்றொரு இளைஞரை போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் வாக்குப்பதிவு மையம் அருகே நடந்ததால், சில நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. போலீசார் தப்பியோடிய இளைஞரை தேடும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
Comments