தஞ்சாவூர்: தேர்தலில் 100% வாக்குப்பதிவு என்பதை வலியுறுத்தி கொலு பொம்மை கண்காட்சி நடைபெற்றது.தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஒருபுறம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மற்றொரு புறம் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகமும், தேர்தல் ஆணையமும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.அந்த வகையில், சட்டமன்றத் தேர்தலில் நேர்மையான மற்றும் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், உலக பாரம்பரிய தினமான இன்று தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில், ‘மெய் அலங்காரம்’ என்ற பெயரில் கொலு பொம்மை கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்தார்.அதில், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தொடர்பான ஏற்பாடுகள், வாக்குச்சாவடியின் அமைப்பு, வாக்காளர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு வசதிகள், தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளின் தொகுப்பு, தஞ்சாவூர் மாவட்ட சுற்றுலாத் தலங்கள், புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் மற்றும் இதர சிறப்புகள் சிறிய வடிவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.மேலும், தஞ்சாவூர் தேர்தல் தூதுவர்களான மெய்யன்-மெய்யாளை (தலையாட்டி பொம்மை) அடையாளப்படுத்தும் வகையில், புவிசார் குறியீடு பெற்ற கைவினைப் பொருட்களான தலையாட்டி பொம்மை, திருபுவனம் பட்டு, சிக்கல் நாயக்கன் பேட்டை கலம்காரி ஓவியம், தஞ்சாவூர் கலைத்தட்டு, தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடுகள், தஞ்சாவூர் கண்ணாடி ஓவியம் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
Comments