திருவண்ணாமலை: பாமகவின் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலுடன் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார். பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக் கூடிய திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள அருணாச்சலேஸ்வரர் கோயிலில் அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு தரப்பினர் வருகை தந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்து வருகின்றனர்.இந்த நிலையில் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவரும், பாமக தலைவர் அன்புமணியின் மனைவியுமான சௌமியா அன்புமணி தனது மகளுடன் இன்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு வருகை தந்து சிறப்பு வழிபாடு செய்தார். அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு வருகை தந்த சௌமியா அன்புமணி சம்மந்த விநாயகர் சன்னதியில் சாமி தரிசனம் செய்து அதனைத் தொடர்ந்து அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலை அம்மனை வழிபட்டார்.பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அண்ணாமலையார் சன்னதியில் வைத்து சிறப்பு வழிபாடு செய்தார். மேலும், சௌமியா அன்புமணிக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து, கோயில் சிவாச்சாரியார்கள் பிரசாதங்களை வழங்கினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் 'நீங்கள் தேர்தலில் போட்டியிடுவீர்களா?' என்ற கேள்விக்கு, சிரித்தபடி எந்த பதிலும் சொல்லாமல் சென்றார்.
Comments