தேனி: 1964ஆம் ஆண்டில் 10ஆம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியில் மீண்டும் சந்தித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது.தேனி மாவட்டம் போடியில் ஜமீன்தாரணி காமுலம்மாள் நினைவு மேல்நிலைப்பள்ளி உள்ளது. 124 ஆண்டுகளை கடந்த இந்த பள்ளியில், 1964ஆம் ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி. பயின்ற மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. அப்போதைய விக்டோரியா மெமோரியல் ஹை ஸ்கூல் ஜமீன்தாரணி காமூலம்மாள் நினைவு பள்ளியாக பெயர் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் அங்கு பயின்று வருகின்றனர்.1964 ஆம் ஆண்டு இந்த பள்ளியில் பயின்ற பலர் தற்போது மருத்துவர், பொறியாளர், தொழிலதிபர் மற்றும் விவசாயிகள் என பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளனர். இந்நிலையில், தான் படித்த பள்ளியில் நண்பர்களை சந்திக்க வேண்டும், தங்களது இளமை பருவத்தை திரும்பி பார்க்க வேண்டும் என நினைத்து தள்ளாத வயதில் நண்பர்களுடன் கைகோர்த்து முன்னாள் மாணவர்கள் இந்த சந்திப்பினை ஏற்பாடு செய்திருந்தனர்.இந்த நிகழ்வில் 90 வயதைக் கடந்த தங்களது வகுப்பு ஆசிரியர், ஆதிமூலம் அவர்களை தேடி கண்டுபிடித்து இந்த நிகழ்ச்சிக்கு வரவழைத்து, அவருக்கு சால்வை அணிவித்தும் அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றனர்.
Comments