தஞ்சாவூர்: சனீஸ்வரர் கோயிலில் ஜப்பானிய நாட்டு பக்தர்கள் வேதமந்திரங்கள் ஓதி சிறப்பு யாகம் நடத்தினர்.தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திருநரையூர் ஸ்ரீபர்வதவர்தினி சமேத இராமநாதசுவாமி திருக்கோயில், சனிபகவான் திருத்தலமாக போற்றப்படுகிறது. இங்கு சனி பகவான், தனது இரு மனைவியரான ஸ்ரீ மந்தாதேவி, ஸ்ரீ தேஷ்டா தேவி மற்றும் மாந்தி, குளிகன் என இரு மகன்களுடன் ஒரே சன்னதியில் வீற்றிருக்க, இவருக்கு நேர் எதிரில் காக்கை வாகனத்தில் பலிபீடமுடன் இங்கு அருள்பாலிக்கிறார். இந்தியாவில் இதுபோல வேறெங்கும் இல்லாததால், இக்கோயில் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.மேலும், மார்ச் 6ஆம் தேதி கன்னி லக்னம், ஹஸ்த நட்சத்திரத்தில் காலை 8.26 மணிக்கு சனிபகவான் வாக்கியப்பஞ்சாங்கப்படி, கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு அருள்பாலிக்கிறார். அதற்காக, மார்ச் 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, சிறப்புப் பூஜைகள் என மார்ச் 8ஆம் தேதி ஞாயிறு மாலை வரை லட்சார்ச்சனை நடைபெறுகிறது. சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு, மார்ச் 6ம் தேதி காலையில் சிறப்பு ஹோமம், அபிஷேகம், தீபாராதனையும் நடைபெறவுள்ளது.இந்நிலையில், ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் உள்ள சிவ ஆதீனத்தின் குருமகா சன்னிதானம் ஸ்ரீபாலகும்ப குருமுனி சுவாமிகள் தலைமையில், 25 பெண்கள், 10 ஆண்கள் என 35 பேர் இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளனர். இந்தியா வந்துள்ள ஜப்பானிய ஆன்மீகக் குழுவின் ஒருபகுதியாக நேற்று இந்த கோயிலுக்கு வருகை தந்தது. சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு, சனிபகவான் கோயிலில் வேதமந்திரங்கள் ஓதி, சிறப்பு யாகம் வளர்த்து, தரிசனம் செய்தனர்.
Comments