கிருஷ்ணகிரி: ஓசூர் தாலுகா அலுவலகம் முன்பு விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஓசூர் அருகே 3700 ஏக்கர் விளைநிலங்களில் அறிவுசார் வழித்தடம் அமைக்க உள்ளதாக தகவல் பரவியது. முன்னதாக 3000 ஏக்கர்கள் விளைநிலத்தில் விமான நிலையம் அமைய உள்ள நிலங்கள் குறித்த விபரங்களும் வெளியானதால், விவசாயிகள் நிலங்களை கொடுக்க மாட்டோம் என தொடர்ந்து விவசாய சங்கங்களை திரட்டி கூட்டங்களை நடத்தி வந்தனர்.இந்நிலையில் இன்று விவசாய அமைப்புகளை சேர்ந்தோர், விவசாயிகள் ஒசூர் பகுதியில் விளையும் ராகி, முட்டைகோஸ், வாழை, தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை டிராக்டர்களில் கட்டிக் கொண்டு சென்று, தாலுகா அலுவலகம் அருகே அண்ணா சிலை முன்புள்ள 4 வழி சந்திப்பில், 2000க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் விவசாயிகள் பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டவாறு ஊர்வலமாக சென்று, தாலுகா அலுவலகத்தில் சார் ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். விவசாயிகள் கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட சார் ஆட்சியர், அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதி அளித்தார். அதன்பின் விவசாயிகள் அனைவரும் கலைந்து சென்றனர்.
Comments