தேனி: 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர், தேனி மாவட்டத்தின் புகழ் பெற்ற திராட்சை சின்னத்துடன் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, தேனி மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில், மாவட்ட நிர்வாகம் பல்வேறு ஆக்கப்பூர்வமான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தேர்தல் விழிப்புணர்வு இலச்சினை (logo) வெளியிடப்பட்டது. தேனி மாவட்டத்தின் தனிச்சிறப்பாக விளங்குவதும், சமீபத்தில் புவிசார் குறியீடு (GI Tag) பெற்றதுமான தேனி பன்னீர் திராட்சையை முன்னிலைப்படுத்தி, ஒரு சிறப்பு தேர்தல் விழிப்புணர்வு இலச்சினை வடிவமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ரஞ்சித் சிங், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்த இலச்சினையை இன்று திறந்து வைத்து விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தார்.ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள இந்தத் தேர்தல் இலச்சினை முன்பு, அரசு அலுவலர்களும் பொதுமக்களும் மிகுந்த ஆர்வத்துடன் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் வருவாய் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு, "கண்டிப்பாக வாக்களிப்போம்" என உறுதிமொழி ஏற்றனர்.
Comments