திண்டுக்கல்: பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு உண்டியல் காணிக்கை மூலமாக ரூ.3.53 கோடி வருமானம் கிடைத்துள்ளது.முருகனின் அறுபடை வீடுகளில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பால தண்டாயுதபாணி சுவாமி கோயில் மூன்றாம் படை வீடாகும். இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பும் பக்தர்கள், இங்குள்ள உண்டியல்களில் பணம், தங்கம், வெள்ளி, நவதானியங்கள் உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்துவது வழக்கம்.இந்த உண்டியல்களில் செலுத்தப்படும் காணிக்கையானது, ஒவ்வொரு மாதமும் எண்ணப்படுவது வழக்கம். அந்த வகையில், பழனி மலைக்கோயிலில் உள்ள உண்டியல்கள் மற்றும் அடிவாரம் திருஆவினன்குடி கோயில் உண்டியல்கள் அனைத்தும் நேற்று முறைப்படி திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் மலைக்கோயில் உண்டியல் காணிக்கை மூலம் மட்டும் ரூ. 3 கோடியே 36 லட்சத்து 70 ஆயிரத்து 630 வருமானமாக கிடைத்துள்ளது. அதேபோல், திருஆவினன்குடி கோயில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ. 16 லட்சத்து 55 ஆயிரத்து 35 வருமானம் பெறப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, ரொக்கப் பணமாக மட்டும் 3 கோடியே 53 லட்சத்து 25 ஆயிரத்து 665 ரூபாய் காணிக்கையாக வந்துள்ளது. மேலும், தங்கம் 576 கிராம், வெள்ளி 8 கிலோ 886 கிராம் மற்றும் 1630 எண்ணிக்கை கொண்ட வெளிநாட்டுச் செலாவணி நோட்டுகளும் பக்தர்களால் காணிக்கையாகச் செலுத்தப்பட்டுள்ளன. இந்தப் பணிகள் கோயில் அதிகாரிகள் மற்றும் வங்கிப் பணியாளர்களின் மேற்பார்வையில் முழுமையாக நிறைவடைந்தன.
Comments