ராணிப்பேட்டை: வாலாஜாபேட்டை சுங்கச்சாவடியில் ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 96 ஆயிரம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் செய்தனர்.ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகிலுள்ள சுங்கச்சாவடி பகுதியில் இன்று அதிகாலை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அனுமதியின்றி பணம் அல்லது பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்க இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.அப்போது நெமிலி தாலுக்கா அசா நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்த ஜெய்லாபுதீன் என்பவர் ஓட்டி வந்த வேனை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையின் போது, வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ₹96,530 ரொக்கப் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, தேர்தல் பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து, வட்டாட்சியர் நடராஜனிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக விசாரணையில், ஜெய்லாபுதீன் மாட்டு வியாபாரி என்பதும், வேலூர் மாவட்டம் பொய்கை பகுதியில் நடைபெறும் மாட்டு சந்தையில் மாடு வாங்குவதற்காகவே இந்த பணத்தை கொண்டு சென்றதாகவும் தெரியவந்தது. இருப்பினும், உரிய ஆவணங்கள் இல்லாமல் பணம் எடுத்துச் சென்றதால், தேர்தல் விதிமுறைகளின்படி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.