கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே பப்பாளி பழத்தில் தோன்றிய விநாயகர் உருவத்தை கண்டு விவசாயிகள், அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.பழங்களின் மரபணு வேறுபாடுகளால் அவற்றின் அளவு, வடிவம், நிறம் மற்றும் சுவை ஆகியவை தீர்மானிக்கப்படுகிறது. அவ்வப்போது கலப்பினமாக்கல் (Hybridization) மூலம் பழங்களின் அளவு, வடிவம், நிறங்களை நிபுணர்கள் ஆராய்ச்சி செய்து மாறுகின்றனர். இந்நிலையில் அதிசய நிகழ்வாக பொள்ளாச்சி அருகே வளர்ந்த பப்பாளி ஒன்று விநாயகர் போல் காட்சியளித்தது விவசாயிகளையும், மக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த திவான்சாபுதூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவர் விவசாயியாக உள்ள நிலையில் பப்பாளி போன்ற பழங்களை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று தோட்டத்தில் பப்பாளியை பறிக்க சென்றுள்ளார். அப்போது விநாயகர் உருவம் கொண்ட அதிசய பப்பாளி ஒன்று விளைந்துள்ளதை கண்டு ஆச்சரியமடைந்துள்ளார். மேலும் மரத்தில் விநாயகர் உருவம் கொண்ட பப்பாளி விளைந்துள்ளதால் இனி இந்த பகுதியில் விவசாயம் செழிப்படையும் என உற்சாகத்துடன் பப்பாளி பழத்திற்கு விபூதி, சந்தனம், குங்குமம் வைத்து மணி ஓசையுடன் தீபாராதனை காட்டினர். அங்கு ஏராளமான கிராம மக்கள் ஒன்று கூடி பப்பாளியை வழிபாடு செய்தனர்.
Comments