தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் வாகைகுளம் பகுதியில் திடீரென வானில் சுழல் காற்று தோன்றிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.தூத்துக்குடியில் (ஜூன் 21) இன்று காலை முதல் பிற்பகல் வரை கடுமையான வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், திடீரென சுமார் 3 மணி அளவில் வானம் மேகமூட்டத்துடன் மாற துவங்கியது.இந்த நிலையில், வாகைகுளம் விமான நிலையம் அருகே டொர்னடோ (Tornado) என்று அழைக்கப்படும், வெளிநாடுகளில் அடிக்கடி உருவாகக் கூடிய சுழல் காற்று வானுக்கும், நிலத்துக்கும் இடையே ராட்சத அளவில் உருவாகியது.இந்த அதிசய நிகழ்வை அந்த பகுதி வாசிகள் ஆச்சரியத்துடன் கண்டதுடன், அதனைச் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இந்த வீடியோக்களே தற்போது இணையத்தில் வைரலாகத் தொடங்கி உள்ளன.திடீரென உருவான சுழல் காற்றால், வாகைகுளம் சுங்கச்சாவடியின் மேற்கூரைகள் முற்றிலுமாக சேதமுற்றது. இதனால் சுங்கச்சாவடி வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதேபோல், சுங்கச்சாவடி அருகே அமைந்துள்ள விளையாட்டு பூங்காவிலும் சூறாவளி காற்றால் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Comments