வேலூர்: காட்பாடியில் பட்டப் பகலில் வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் வெறும் 3 நிமிடங்களில் திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.காட்பாடி ராஜாஜி நகர், கணக்கர் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் உணவகம் நடத்தி வருகிறார். இன்று வழக்கம் போல் காலை தனது உணவகத்திற்கு தேவையான காய்கறிகளை வாங்கி கொண்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன் நிறுத்தி விட்டு உள்ளே சென்றுள்ளார்.அப்போது அவர் வீட்டிற்குள் சென்ற சில நிமிடங்களில், அங்கு வந்த இரண்டு மர்ம நபர்கள் சதீஷ்குமார் வாகனத்தை அவர்கள் கொண்டு வந்த மற்றொரு இரு சக்கர வாகனத்தின் உதவியுடன் திருடிச் சென்றுள்ளனர். பின்னர் வீட்டில் இருந்து வெளியே வந்த சதீஷ்குமார், தனது இரு சக்கர வாகனம் திருடிச் செல்லப்பட்டது அறிந்து அதிர்ச்சி அடைந்தார். சதீஷ்குமார் புகாரை பெற்ற காட்பாடி போலீசார், அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
Comments