சென்னை: ஸ்ரீ சக்தி விநாயகர் கோயிலுக்கு 'ஐராவதம்' என்ற பெயர் கொண்ட இயந்திர யானை அன்பளிப்பாக வழங்கப்பட்டது.ஆவடி ஓ.சி.எப்., தொழிற்சாலை நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று, பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட், அவரது மகன் அயான் சூட், தனியார் அமைப்புகளான பி.எப்.சி.ஐ., மற்றும் பீட்டா அமைப்புகள் இணைந்து ஓ.சி.எப். எஸ்டேட் குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் கோயிலுக்கு 'ஐராவதம்' இயந்திர யானையை நேற்று அன்பளிப்பாக வழங்கினர். முன்னதாக ஆவடி ஓ.சி.எப்., சாலையில் நடந்த நிகழ்ச்சியில், முதன்மை பொது மேலாளர் பி.எஸ்.ரெட்டி, 'ஐராவதம்' இயந்திர யானையை அறிமுகம் செய்து வைத்தார். அதனை பொதுமக்கள், ஓ.சி.எப்., நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் வடம் பிடித்து இழுத்து சென்று கோயிலுக்கு வழங்கினர். 'ஐராவதம்' என்பது இந்து புராணங்களில் பாற்கடலைக் கடைந்த போது தோன்றிய இந்திரனின் தெய்வீக வெள்ளை யானை ஆகும். நேற்று அன்பளிப்பாக வழங்கப்பட்ட 'ஐராவதம்' இயந்திர யானை, 6.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 12 உயரம், 800 கிலோ எடையுடன், அதிநவீன தொழில்நுட்பத்தில் கேரளாவில் தயார் செய்யப்பட்டது. பாட்டரியால் இயங்கும் இந்த 'ஐராவதம்' இயந்திர யானை, கண்களை சிமிட்டி, காதுகள், வாலை அசைத்து, தும்பி கையால் பக்தர்களுக்கு நீரால் ஆசீர்வாதம் செய்கிறது. இது தமிழ்நாட்டில் அமைக்கப்பட்ட இரண்டாவது இயந்திர யானையாகும்.
Comments