திண்டிவனம்: தள்ளுவண்டியில் வியாபாரம் செய்து வரும் முதியவர் ஒருவர் ‘முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தேடுகிறேன்’ என்று எழுதப்பட்ட பதாகையுடன் பாஜகவினருடன் சேர்ந்து திடீரென போராட்டத்தில் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து தமிழக பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 20-க்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டனம் தெரித்து கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டம் நடைபெறுவதற்கு முன், மூன்று சக்கர தள்ளுவண்டியில் கோலமாவு வியாபாரம் செய்யும் பூதேரி பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்ற முதியவர் போராட்டம் நடத்தும் இடத்தில் பாதையை மறித்துக் கொண்டு நின்றுள்ளார். அப்போது ஆர்ப்பாட்டம் நடத்த வந்தவர்கள், அவரிடம் தாங்கள் போராட்டம் நடத்தப் போவதாகவும், அங்கிருந்து தள்ளிச் சென்று நிற்கும்படி கூறியுள்ளனர். அப்போது முதியவர் திடீரென ’தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தேடுகிறேன்’ என்ற வாசங்கள் பொருந்திய பதாகையை ஏந்தி ’முதலமைச்சரை கைது செய்யுங்கள்’ என கோஷமிட்டார். இதனைப் பார்த்த காவல் துறையினர் அவர் கையில் இருந்த பதாகையை அப்புறப்படுத்தினர். இதனைக் கவனித்த பாஜக சார்பில் போராட்டம் நடத்தவந்தவர்கள் முதியவருக்கு ஆதரவாக பேசி பதாகையை திரும்பி முதியவரிடம் கொடுக்குமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Be the first to comment