திண்டுக்கல்: பழனி முருகன் கோயிலில் காணிக்கையாக ரூ.4.35 கோடி பெறப்பட்டுள்ளது.பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் வைகாசி விசாகம் மற்றும் கோடை விடுமுறையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதன் காரணமாக மலைக்கோயில் உண்டியல்கள், உபகோயில் உண்டியல்கள் 21 நாட்களில் நிரம்பியது. இதனையடுத்து, கடந்த வியாழக்கிழமை (ஜூன் 4) மற்றும் வெள்ளிக்கிழமைகளில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இந்நிலையில், இரண்டு நாள் நடைபெற்ற எண்ணும் பணி நிறைவடைந்துள்ளது. அதன்படி, உண்டியலில் ரொக்கமாக ரூ. 4 கோடியே 35 இலட்சத்து 55 ஆயிரத்து 571 வரவு கிடைத்துள்ளது. உண்டியலில் பக்தர்கள் தங்கத்திலான வேல், தாலி, மோதிரம், செயின், தங்கக்காசு போன்றவற்றையும், வெள்ளியால் ஆன காவடி, வளையம், வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். இதன்மூலம் தங்கம் 954 கிராமும், வெள்ளி 9 ஆயிரத்து 331 கிராமும் கிடைத்தது. மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஐப்பான், ஆஸ்திரேலியா, மியான்மர் உள்ளிட்ட பல்வேறு நாட்டு பணத்தாள்கள் 838 கிடைத்துள்ளது. இவை தவிர பித்தளை வேல், வாட்ச், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். பழனி கோயில் உண்டியல் எண்ணிக்கையில் தன்னார்வலர்கள், பழனியாண்டவர் கல்லூரி அலுவலர்கள், திருக்கோயில் அலுவலர்கள், வங்கி பணியாளர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.
Comments