திருநெல்வேலி: மணிமுத்தாறு அணையின் பிரதான கால்வாயான 80 அடி கால்வாயிலில் திடீர் உடைப்பு ஏற்பட்டதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் 118 அடி கொண்ட மணிமுத்தாறு அணை உள்ளது. இது மாவட்டத்திலேயே அதிக கொள்ளளவு கொண்ட பிரதான அணையாகும். இந்த அணையின் முக்கிய கால்வாயாக விளங்கும் 80 அடி கால்வாயிலில், அணையின் நீர்மட்டம் 80 அடிக்கு மேல் இருக்கும் நேரங்களில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும். இதன் மூலம் தெற்கு கல்லிடைக்குறிச்சியை அடுத்த பொட்டல் கிராமத்தில் இருந்து சேரன்மகாதேவி, ராதாபுரம், திசையன்விளை உள்ளிட்ட தாலுகாவில் பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தற்போது மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 98 அடிக்கு மேல் உள்ளதால் 80 அடி கால்வாய் மூலமாக விவசாயம் உள்ளிட்ட தேவைகளுக்காக விநாடிக்கு 440 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வீரவநல்லூர் அடுத்த ரெட்டியாபுரம் என்ற கிராமத்தின் அருகே இந்த 80 அடி கால்வாயில் நள்ளிரவு திடீரென உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கால்வாயில் இருந்து பல்லாயிரக்கணக்கான கன அடி தண்ணீர் வீணாக அருகே உள்ள விவசாய நிலங்களுக்குள் செல்கிறது. தொடர்ந்து தண்ணீர் செல்வதால் அப்பகுதியில் உள்ள நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
Comments